இணையவழிக் கல்வி கட்டுரை

inaya vazhi kalvi katturai

இன்று நவீன உலகில் அனைத்து விடயங்களுமே நவீனமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது போலவே கல்வியும், கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளில் நவீனமடைந்துள்ளது.

அதாவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது இன்று இணைய வழிக் கல்வியினை வழங்குகின்றது. தொழில்நுட்பம் என்றாலே அதில் நன்மை, தீமை என இரு பக்கங்களும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இணையவழிக் கல்வி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தற்காலமும் இணையமும்
  • இணைவழி கல்வியின் அவசியம்
  • இணையவழி கல்வியின் சாதகங்கள்
  • இணையவழிக் கல்வியின் பாதகங்கள்
  • முடிவுரை

முன்னுரை

நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது தொழில்நுட்ப யுகத்திலாகும். எனவே மனிதன் தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய எல்லா வேலைகளையும் இலகுவாக செய்து கொள்ளும் வகையில் இணையத்தை பயன்படுத்துகின்றான்.

அந்த வகையில் கல்வியும் இணையத்தின் மூலமே இலகுவாக தேடி கற்றுக் கொள்ளும் வகையில் இன்றைய நிலைமை மாறிவிட்டது.

மனிதன் தொடர்பாடல், தொழில்நுட்பத் துறைகளில் பாரிய வளர்ச்சி அடைந்தமையானது, இந்த இணைய வழி கல்வியின் வளர்ச்சியிலும் செல்வாக்கு செலுத்துவதனைக் காணமுடிகின்றது.

தற்காலமும் இணையமும்

இன்றைய உலகம் நாளுக்கு நாள் மாற்றங்களுக்கு உட்பட்டு புதிய மாற்றங்களுடனேயே செயற்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே நவீன யுகத்தில் மக்கள் அனைவரும் தங்களது வேலைகளை இணையதளத்தின் மூலமே செய்து வருகின்றனர்.

உதாரணமாக இணையதளத்தில் ஆடைகள் வாங்குதல், உணவு பண்டங்கள் வாங்குதல் போன்றவற்றை குறிப்பிடலாம். இன்று மனிதன் முழு உலகத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டான்.

அதன் விளைவாகவே இன்று மருத்துவம், வானவியல், சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் இணையதளத்துக்குள் அடங்கிவிட்டன.

இன்றைய மாணவர்களும் தங்களுடைய கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலகுவான ஒரு வழிமுறையாகவே இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

இணைவழிக் கல்வியின் அவசியம்

அண்மைக் காலத்தில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் மிகவும் சிரமம் ஏற்பட்ட போது, இந்த இணையவழிக் கல்வியே பெரிதும் உதவியாக இருந்தமையைக் காண முடியும்.

அதாவது மாணவர்கள் பாடசாலை, பல்கலைக்கழகம், கல்வி நிலையங்கள் என்பவற்றுக்கு சென்று கல்வி கற்க முடியாத அந்த நிலையில் மாணவர்களின் கல்வித்தாகத்தினை தீர்த்த ஒரு இடமாகவே இந்த இணைவழிக் கல்வி காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் பல மாணவர்கள் இணையவழி மூலம் தங்களுடைய பகுதி நேர வகுப்புகளையும், தங்களுடைய சுய கற்றல்களையும் மேற்கொள்வதனைக்காண முடிகின்றது.

இணையவழிக் கல்வியின் சாதகங்கள்

நெருக்கடியான காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த போது, தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இணைய வழி கல்வியே உதவியாக இருந்தமையைக் குறிப்பிடலாம்.

மேலும் இந்த இணைய வழி கல்வியானது பயண செலவு, உணவு , தங்குமிட செலவு எதுவுமே இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கல்வியினை மேற்கொள்வதற்கு உதவுவதாக காணப்படுகின்றது.

இன்னும் தமது பாடங்களுக்கான மிகச் சிறந்த ஆசிரியர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களிடம் கல்வி கற்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை மாணவர்களுக்கு பெற்று கொடுக்கின்றது.

அத்தோடு மாணவர்களுக்கு தேவையான சகல விதமான கேள்விகளுக்கான பதில்களையும், மேலதிக குறிப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கு இந்த இணைய வழிக் கல்வி உதவுகின்றது எனலாம்.

இணையவழிக் கல்வியின் பாதகங்கள்

இணைய வழி கல்வியில் மாணவர்கள் ஆசிரியர்கள் என்ற முகத்துக்கு முகமான கல்வி முறையினை காண முடியாது. அதாவது நேரடியாக கற்பது போன்று தெளிவாகவும், சந்தேகம் இன்றியும் கற்கின்ற வாய்ப்பை மாணவர்கள் இந்த இணைய வழிக் கல்வியில் இழக்கின்றனர்.

முக்கியமாக தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு வசதி இல்லாத மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத ஒரு நிலைமையைக்கு உள்ளாகின்றனர்.

மேலும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகையில் கல்விக்காக மட்டுமின்றி தவறான வழிமுறைகளிலும் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இவ்வாறான பாதகங்களும் இணைய வழிக் கல்வியில் காணப்படுகின்றன.

முடிவுரை

இன்றய போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தங்களுடைய கல்வி அறிவினையும், தொழில்நுட்ப அறிவினையும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இணைய வழி கல்விக்காக தொழில்நுட்பங்களை பாயன்படுத்துகையில், அதில் நன்மை, தீமை ஆகிய இரண்டு பக்கங்களும் காணப்படவே செய்யும்.

எனவே மாணவர்கள் தொழில்நுட்பங்களை பாயன்படுத்தும் போது சரியான முறையில் அதனை பாவித்து அதன் மூலம் பயன்களை பெற்றுக் கொள்வது அவசியமானதாகும்.

You May Also Like:

கல்வி புரட்சி கட்டுரை