நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்

நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்

நினைவாற்றல் என்பது தான் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.

நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். எனினும் உரிய நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள்.

இவ்வாறு தேவைப்படும் நேரத்தில் தேவையான செய்தி உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியாததையே ஞாபக மறதி என்கின்றோம். ஞாபக சக்தி இல்லாத மனிதன் தன்னை வெளிப்படுத்தும் திறனையும் பெருமளவில் இழந்து விடுகின்றான்.

மேலும் இன்றைய உலகில் குழந்தைகள் போட்டி நிறைந்த உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். போட்டிகளும், கல்வி மீதான அழுத்தமும் குழந்தைகளின் உலகைச் சுருங்கி விட்டுள்ளது. இதனால் ஞாபக மறதி ஏற்பட்டு நினைவாற்றல் திறன் குறைகின்றது.

கல்வி என்பதையும் தவிர இன்று அனைவரும் தமது வாழ்க்கையின் எல்லா நகர்வுகளுக்கும் நினைவாற்றல் அவசியமானதாக உள்ளது. ஆனாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாக ஞாபக சக்தி குறைபாடு காணப்படுகின்றது.

இரவு பகல் என விழி திறந்து படித்தாலும் அடுத்த அரை மணி நேரத்தில் படிப்பது எல்லாம் மறந்து விடுகின்றனர். அது போல் பெரியவர்களும் அன்றாட செயல்பாடுகள், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் எனப் பலவற்றையும் மறந்து விடுவதுண்டு.

இதனை தடுப்பதற்கு நினைவாற்றல் அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது அவசியமானதாகும்.

நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்

நினைவாற்றல் குறைவதற்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. குறிப்பாக மூளை வளர்ச்சி குறைவு, மன அழுத்தம், மனப்பதட்டம் போன்ற பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும் சில எளிய வழிமுறைகளை மேற்கொள்ளும் போது சிறந்த நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.

மனிதனின் நினைவாற்றலுக்கும், மனதை ஒருநிலைப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் மனதை எந்த அளவிற்கு ஒரு நிலைப்படுத்தி குறித்த விடயத்தில் கவனம் செலுத்துகின்றோமோ அந்தளவிற்கு அது மனதில் பதிந்து விடும்.

எனவே நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான முதற்படியாக கவன சிதறல்களுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்து மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல் போன்றவை மூலமாக மனதை ஒருநிலைப்படுத்த முடியும். அது மட்டுமல்லாது மன அழுத்தம், மன பதட்டம் போன்றவையும் இவை மூலம் குறைக்கப்படும். ஆரோக்கியமான மூளையில் தகவல்களை நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

மூளைக்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும் – அதாவது மூளைக்கு பயிற்சி வழங்குதல் குறுக்கெழுத்துல் போட்டி, எண்புதிர், அயல் மொழிகளை கற்றல் போன்றன சில பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற முடியும்.

உணவு முறை – நமது நினைவாற்றலில் சேமித்த விஷயங்களை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ள உணவால் கிடைக்கின்ற சத்துக்கள் மூளைக்கு உதவுகின்றன. எனவே நம் நினைவாற்றலை அதிகப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. பழங்களை உண்ணுதல், வல்லாரை, தூதுவளை போன்ற கீரை வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும்.

You May Also Like:

பொடுகு வர காரணம் என்ன