ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை

oozhal vilipunarvu katturai in tamil

நம் இந்திய நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப ஊழல் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகின்றது. இவற்றை தடுப்பது இன்றைய எதிர்காலத்தின் விளைவாக மாறியுள்ளது.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டம்

  • முன்னுரை
  • ஊழல் நடவடிக்கை என்றால் என்ன
  • நாட்டில் ஊழல் செயற்பாடுகள்
  • ஊழலினால் நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவுகள்
  • ஊழலை தடுக்கும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

நம் முன்னோர்களின் படைப்புக்களில் ஒன்று நம் சுதந்திரமான இந்திய நாடு. இந்திய நாட்டில் சுதந்திரத்திற்கு போராடி வீரமரணமடைந்தவர்கள் ஏராளம். ஆனால் இன்று அந்த நாட்டின் பாதை பாதளத்திற்குள் செல்கின்றது.

காரணம் நாட்டைப்பாதுகாக்க வேண்டிய இடத்தில் ஊழல் தொடர்பான மோசடிகள் இடம்பெறுவதனால் ஆகும். இதனை அடிப்படையாக கொண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வை பற்றி இந்த கட்டுரையில் நோக்கலாம்.

ஊழல் நடவடிக்கை என்றால் என்ன

எந்த ஒரு மனிதன் தனது கடமைகளை செய்ய தவறுகின்றானே அங்கு ஊழல் நடவடிக்கை தோன்றுகிறது.

அந்தவகையில் ஊழல் என்பது மனித வாழ்க்கை மேல் உள்ள மோகம் ஆகும். அல்லது ஒருவன் தன்னிடம் உள்ள குறைகளை மறைக்கவும் இன்னொருவன் அந்த குற்றத்தை சாதகமாக வைத்து தனக்கு தேவையானதை பெற்று கொள்ளவும் மொத்தமாக இருவரும் தமது தேவையை சட்டவிரோதமாக பூர்த்தி செய்வதும் ஊழல் நடவடிக்கை ஆகும்.

மாறாக ஒரு தனிநபரின் நலனுக்காக தனிப்பட்ட பதவியை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஊழல் நடவடிக்கை ஆகும். இவ்வாறு ஊழல் நடவடிக்கையை பல வழிகளில் கூறலாம்.

நாட்டில் ஊழல் செயற்பாடுகள்

ஊழல் செயற்பாடுகள் நாட்டில் ஏற்படுவதற்கான காரணம் இந்திய நாட்டின் அனைத்து குடிமக்களும் ஆகும். காரணம் தவறான நிலைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பவன் மட்டும் ஊழல் செய்யவில்லை அதற்கு ஆதரிக்கும் விதமாக கண்டும் காணாமல் இருக்கும் சாதாரண மக்களும் தான்.

சாதாரண மக்களின் ஊழல் என நான் இங்கு குறிப்பது வீதி ஒழுங்குகளை பின்பற்றாமல் செல்லுகின்றோம். பின் காவல்துறை இலஞ்சப்பணம் கேட்பதாக புகார் கூறுகின்றோம். அவர்கள் ஊழல் பணம் வாங்குவது எந்த வகையில் குற்றமோ அந்த வகையில் நம் தவறை மறைக்க இலஞ்சப்பணம் கொடுப்பதும் தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

நாட்டிற்குள் ஊழல் என்பது பல துறைகளிலும் மலிந்து காணப்படுகின்றன. விளையாட்டுத்துறையை எடுத்து கொண்டால் பணக்கார மாணவர்களைக்கும் திறமையற்ற மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்குதல்.

நாட்டையே பாதுகாக்கும் அரசியல் துறையை எடுத்தால் தேர்தல் காலங்களில் பணத்தை செலுத்தி வாக்குகளை பெற்றுக்கொள்ளுதல் என பல ஊழல்கள் இடம் பெறுகின்றன.

ஊழலினால் நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவுகள்

நாட்டுக்குள் ஊழல் என்பது பணத்தில் தொடங்கி சொத்து வரை காணப்படுகின்றன. ஆனால் இன்று பெண்களின் வாழ்க்கையை ஊழலாக பயன்படுத்தும் கயவர் கூட்டங்களும் உண்டு.

ஊழல் ஒன்று நாட்டில் ஏற்படும் போது தனி நபர் மட்டும் அல்லாது நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய மாற்றம் ஏற்படும்.

உதாரணமாக கல்வி தொடர்பிலும் விளையாட்டு துறை தொடர்பிலும் அரசாங்க பாடசாலையை விட தனியார் பாடசாலை மாணவருக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

இதன் மூலம் சிறந்த பல மாணவர்களின் செயற்பாடுகள் நிராகரிக்கப்படுகின்றது. இவற்றால் நாட்டின் கல்வி துறையும் விளையாட்டுதுறையும் பாரிய பின்னடைவுக்கு தள்ளப்படும்.

வேலைவாய்ப்பு தொடர்பில் அதிக அனுபவமும், அறிவும் உள்ளவன் நிராகரிக்கப்பட்டு அனுபவமற்றவனும், அது தொடர்பான அறிவு அற்றவனையும் தெரிவு செய்கின்றனர். இதனால் அனுபவம், அறிவு உள்ளவன் வெளிநாடு செல்ல வேண்டி ஏற்படுகின்றது.

இவற்றால் நாட்டின் வேலையில்லாதோர் அதிகம் காணப்படல் மற்றும் தனிப்பட்ட துறையில் தேர்ச்சி இல்லாதவர்கள் காணப்படுவதால் தொழில்சார் பிரச்சனைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படல், நிரபராதி தண்டிக்கப்படல், அதிகார துஷ்பிரயோகங்கள் இவ்வாறு இன்னும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஊழலை தடுக்கும் வழிமுறைகள்

ஊழல் தொடர்பான பிரச்சினை இந்திய நாட்டில் மட்டும் அல்லாது உலக நாடுகளிலும் காணப்படுகின்றது. இதனால் ஊழல் தடுப்பு விழிப்புணர்வாக டிசம்பர் 9ஆம் திகதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகின்றது. இதன் விளைவாக நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்படும் ஊழல் செயற்பாடுகளை முடிந்த அளவு குறைக்கப்படுகிறது.

இந்திய நாட்டின் ஊழல் தொடர்பான வலுவான சட்டங்களை உருவாக்க வேண்டும். தகுதி அற்ற அதிகார பொறுப்பில் உள்ளவர்களை பதவி நீக்கம் செய்தல் வேண்டும்.

மக்கள் இடையே ஊழல் வழங்குபவருக்கு அதிகமான தண்டனை வழங்க வேண்டும். பொதுமக்களிடையே ஊழல் தொடர்பான விழிப்புணர்வை வழங்குதல். இவற்றின் மூலம் ஊழல் தொடர்பான செயற்பாடுகளை தடுக்க முடியும்.

முடிவுரை

எனவே இயன்றளவு ஊழல் தொடர்பான விடயங்களை மக்கள் ஆகிய நாங்கள் தான் குறைக்க வேண்டும். அப்பொழுது தான் உண்மையான சுதந்திர இந்தியாவாக மாற்ற முடியும். நாம் சிறு தவறுகளை கூட மூடி மறைப்பதற்கு ஊழல் வழங்குகின்றோம்.

அதனால் தான் அத்தியாவசிய தேவையை கூடி பூர்த்தி செய்ய முடியாத கட்டாயத்தில் உள்ளோம். அதற்கும் ஊழல் வழங்கி பெற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆகவே ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்கி நாட்டை பாதுகாப்பானதாக்க வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாகும்.

You May Also Like:

வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை