மாணவர்களின் கடமைகள் கட்டுரை

manavarkalin kadamaigal in tamil

ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் அந்நாட்டு மாணவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகள் எது என்பதனை சரியான முறையில் புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் அந்த நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி என்பவற்றினை எட்ட முடியும்.

மாணவர்களின் கடமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நல்லொழுக்கம் பேணுதல்
  3. பெற்றோர் சொற்படி நடத்தல்
  4. ஆசிரியர்களை மதித்தல்
  5. தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியினையும் கடைபிடித்தல்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு மனிதனின் வாழ்நாளில் மிகவும் சிறந்ததொரு காலப்பகுதியாகவே மாணவப் பருவம் காணப்படுகின்றது.

இந்த மாணவப் பருவத்தை நாம் சிறந்த முறையில் பயன்படுத்துவோமே ஆனால் எமது எதிர்காலமும் சிறந்து விளங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அந்த வகையில் மாணவர்கள் கைக்கொள்ள கூடிய கடமைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இக்கட்டுரையில் நோக்கலாம்.

நல்லொழுக்கம் பேணுதல்

மாணவர்கள் நல்லொழுக்கம் பேணுவதில் அன்னப்பறவைகளை போல் இருக்க வேண்டும். அதாவது அன்னப்பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால், நீரை தவிர்ந்து, பாலை மட்டுமே அருந்தும்.

அதுபோல மாணவர்களும் தீயவை, நல்லொழுக்கம் ஆகியவற்றுள் தீயென களைந்து நல்லொழுக்கங்களை மட்டுமே கைக்கொள்ள வேண்டும்.

பொய், களவு, நயவஞ்சகத்தனம் போன்ற தீய பழக்கங்களில் இருந்து ஒதுங்கி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற நல்ல ஒழுக்கங்களை மாணவர்கள் கடைபிடிப்பது, அவர்களுடைய தலையாயக் கடமையாகும்.

பெற்றோர் சொற்படி நடத்தல்

பெற்றெடுத்து பாராட்டி சீராட்டி வளர்க்கக்கூடிய ஒவ்வொரு பெற்றோர்களையும் மதிப்பது மாணவர்களாகிய எமது கடமையாகும்.

அதாவது “தாயிற் சிறந்த கோயில் இல்லை. தந்தையின் சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப பெற்றோரின் சொற்படி கேட்டு நடப்பது அவசியமானதாகும்.

கண்கண்ட தெய்வங்களான தாய், தந்தை ஆகியவர்களது மனம் மகிழும் வகையில் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்வோமே ஆனால் அவர்களுடைய ஆசிர்வாதமும் எமக்கு கிடைக்கப்பெற்று உயர்ந்த நிலைகளினை அடைந்து கொள்ள முடியும். எனவே பெற்றோரின் சொற்படி கேட்டு நடப்பது எமது மிகப்பெரிய கடமையாகும்.

ஆசிரியர்களை மதித்தல்

மாதா, பிதா, குரு, தெய்வம் என சான்றோர்களால் வணங்குவதற்கு தகுதியானவர்களின் வரிசையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இந்த ஆசிரியர்களே முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கக்கூடிய ஆசான்களை எப்பொழுதும் மதித்து நடப்பது மாணவர்களின் தலையாயக் கடமையாகும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைகளை பெறுவதற்கு ஏணிப்படி போல் இருப்பவர்கள் ஆசிரியர்கள் எனவேஅந்த ஏணிப்படியை உபயோகித்து விட்டு தள்ளி விடுவது போல் ஆசிரியர்களை மறந்து மதிக்காமல் செயல்படுவது ஒரு போதும் சிறந்ததல்ல.

தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியினையும் கடைபிடித்தல்
“முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய இலக்குகளை நோக்கி, எப்பொழுதும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அதாவது “விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்” என்ற வாசகங்களுக்கு அமைவாக மாணவர்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த முயற்சி கைகூடி விட்டால் வெற்றி, இல்லையேல் அது ஓர் அனுபவமாகி மீண்டும் முயற்சிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

எனவே இலட்சியத்தை நோக்கிய மாணவர்களின் பயணத்தில் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கடைபிடிப்பது, மிக முக்கியமான கடமை ஒன்றாகவே காணப்படுகின்றது.

முடிவுரை

மாணவர்களுக்குரிய கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றிய பலர் இன்று உயர்ந்த நிலைகளில் உள்ளனர்.

எனவே மேற்குறிப்பிட்ட கடமைகள் தவிர நேர முகாமைத்துவம், பொதுநலம் பேணுதல், பணிவு நடத்தை போன்ற இதர கடமைகளையும் மாணவர்கள் உரிய முறையில் அறிந்து கொண்டு அவற்றினை செயல்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.

You May Also Like:

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

இணையவழிக் கல்வி கட்டுரை